ஆக்கிரமித்த நிலத்தை திரும்ப ஒப்படைத்த வேலம்மாள் கல்லூரி தாளாளர் முத்துராமலிங்கம்
மதுரை: மதுரை அருகே ரூ 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த வேலம்மாள் கல்லூரியின் தாளாளர் முத்துராமலிங்கம், அந்த நிலத்தை நில உரிமையாளர் சமையாளிடம் திரும்ப ஒப்படைத்தார்.
மதுரை, தெய்வக்கனி தெருவில் குடியிருப்பவர் அழகர்சாமி, இவரது மனைவி சமையாள். இவர் மதுரை புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிடம் அளித்த புகார் மனுவில், மதுரை தெற்கு வட்டம் அனுப்பானடியில் எனது 1.43 ஏக்கர் நிலத்தை வேலம்மாள் கல்லூரி தாளாளர் முத்துராமலிங்கம், அவரது உதவியாளர் திருப்பதி வெங்கடேசன், காண்ட்ராக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் மிரட்டி கேட்டனர்.
மேலும் விவசாயம் செய்யவிடாமல் சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டினர். 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை வேலம்மாள் கல்லூரியின் தாளாளர் முத்துராமலிங்கம், வேலம்மாள் கிராமம் ஆரம்பிக்க அப்பகுதியில் உள்ள 60 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்தார்.
எங்கள் நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டதால் தர மறுத்தோம். ஆனாலும் எங்களை மிரட்டி 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டனர். இந்த நிலத்தை மீட்டு தருமாறு கூறியிருந்தனர்.
இந்த புகார் தொடர்பாக நில அபகரிப்பு மீட்பு பிரிவு காவல் துணை காண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோர் விசாரித்தனர். இது தொடர்பாக வேலம்மாள் கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் அவரது உதவியாளர் திருப்பதி வெங்கடேசன் மற்றும் காண்ட்ராக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர்கள் மீது நிலஅபகரிப்பு மீட்பு பிரிவில் வழக்கு பதிந்தனர்.
மேலும், விஜய் ஆனந்த், திருப்ப தி வெங்கடேசன் ஆகிய 2 இருவரை கைது செய்தனர். முத்துராமலிங்கத்திடம் விசாரிக்க அவரை தேடி வந்தனர். ஆனால், இந்த வழக்கில் முத்துராமலிங்கத்திற்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முத்துராமலிங்கம் 1.43 ஏக்கர் நிலத்தை சமையாளிடம் திரும்ப ஒப்படைத்தார். இதையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications