எங்களை நம்பி வந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி: பாஜக

இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக்காக முயன்று கொண்டிருந்த நிலையில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே பாஜக சட்டமன்ற தேர்தலை தனியாக சந்திப்பது என துணிச்சலாக முடிவெடுத்தது.
பிற கட்சிகள் கூட்டணிக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியை பற்றி கவலை கொள்ளாமல் தேர்தலை எதிர்கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான தி.மு.கவிற்கு எதிரான மாபெரும் அலைவீசிய நேரத்திலும் பாஜக கெளரவமான வாக்குகளை பெற்றது.
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடுவது என்று ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது. அதே நேரம் பாஜகவின் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு பாஜகவை கூட்டணிக்காக அணுகி வரும் கட்சிகளோடு உறவு கொள்ள தயங்க மாட்டோம் என்பதையும் அறிவித்திருந்தது.
பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தங்கள் விருப்பத்தை தெரிவித்தது. கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஈஸ்வரன் கூட்டணி குறித்து பேச அமைத்த 'சக்தி கோச்' நடராஜன், பாலசுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோரை கொண்ட குழு சந்தித்து கூட்டணிக்கான தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி அதற்கான கடிதத்தை வழங்கி உள்ளனர்.
பாஜகவை முழுமையாக நம்பி கூட்டணி வைத்துக் கொள்ள முன் வந்துள்ள கொங்கு நாடு முன்னேற்ற கழகத்திற்கு பாராட்டுக்களை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்று நாமக்கல், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை , உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி , சூலூர், பல்லடம் ஆகிய இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications