குழந்தை திருமணத்தை கைவிட்ட 5 பெண்களை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட பாக். கிராமம்
பஞ்சாப் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் குழந்தைகளாக இருக்கும்போது கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட 5 இளம்பெண்கள் தற்போது திருமண பந்தத்தில் இருக்க மறுத்ததால் அவர்களை ஊரைவிட்டுத் தள்ளி வைத்துள்ளனர். மீறி ஊருக்குள் வந்தால் கற்பழிக்கவோ, கொலை செய்யவோப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்பகுதிகளில் பொதுவாக பஞ்சாயத்து தலைவர்கள்தான் ( நம் ஊர் நாட்டாமை போல) மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது வழக்கம். அவர்களின் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட சில வழக்குகள் மட்டுமே போலீசாரிடமும், நீதிமன்றத்திற்கும் செல்லும்.
இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டும் அவர்களுக்கு 6 முதல் 13 வயது இருக்கும் போது முல்லா என்பவரது படிப்பறிவில்லாத மகன்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. கிராம நிர்வாகிகளின் முன்னிலையில் துப்பாக்கி முனையில் இந்த திருமணம் நடந்தது.
அப்போது தனது மகளின் திருமணத்திற்கு மறுத்த சிறுமிகள் ஒருவரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது அந்த 5 இளம்பெண்களும் தங்களை கட்டாயப்படுத்தி செய்த குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
இது குறித்த புகார் கிராமத்து தலைவர்களிடம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த நாட்டாமை குழு, கிராமத் தலைவர்களையும், கிராமத்தின் சட்டத்தையும் மதிக்காத அந்த 5 பெண்களையும் கிராமத்தை விட்டு தள்ளி வைத்தனர். மேலும் அவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications