மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தனித்துப் போட்டி- வேட்பாளர்களை அறிவித்தது
சென்னை: அதிமுகவிடம் போய் திரும்பத் திரும்பக் கெஞ்சாமல் தனது வேட்பாளர்களை சத்தம் போடாமல் அறிவித்து தானும் தனித்துப் போட்டியில் குதித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இடம் கூட தராமல் கூட்டணிக் கட்சிகளுக்கு பட்டை நாமம் போட்ட அதிமுக, இடதுசாரிகளுடன் மட்டும் லேசுபாசாக பேச்சு நடத்தி வந்தது. இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. தேமுதிகவை அது கண்டு கொள்ளவே இல்லை. இதனால் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தங்களது நிலை குறித்து விவாதிக்க சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் நேற்று ஆலோசனை நடத்தின. இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. சிபிஐ இன்று முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை திடீரென வெளியிட்டது.
கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மேயர் - இரா.ஜோதிராம் (மாநிலக்குழு உறுப்பினர்)
திருப்பூர் மேயர் - கே.காமராஜ் (எ) சுப்பிரமணியம் (மாவட்டச் செயலாளர்)
வேலூர் மேயர் - ஜி.லதா (மாவட்ட செயற்குழு உறுப்பினர்)
கோவை மேயர் - யு.கே.சிவஞானம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்)
இவர்கள் தவிர 109 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள், 17 நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள், 48 பேரூராட்சித் தலைவர் பதவி வேட்பாளர்கள் மற்றும் 33
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களையும் சிபிஎம் அறிவித்துள்ளது.
இது முதல் பட்டியல் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கட்சியும் வெளியே வரும் பட்சத்தில் அக்கட்சியுடன் உடன்பாடு கண்டு மீதமுள்ள இடங்களுக்கும் வேட்பாளர்களை சிபிஎம் அறிவிக்கும் என்று தெரிகிறது.
சிபிஐ இன்று வெளியே வரும்?
இன்று தனது முடிவை அறிவிப்பதாக சிபிஐ அறிவித்துள்ளது. அதன்படி இன்று அதிமுக கூட்டணி அமைக்கிறதா, இல்லையை என்பதை அது தெளிவுபடுத்தும். சிபிஎம் வெளியே வந்து விட்டதால் சிபிஐயும் அதே முடிவையே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications