வேகமாக வளர்ந்து வருகிறது இந்திய பொருளாதாரம்: ஐ.நா.வில் பிரதமர் பேச்சு

ஐ. நா. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.
அப்போது அவர் பேசுகையில்,
வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவால் உலக பொருளாதாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முடியும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதலீடு, தொழில்நுட்பம், பொருட்களை விற்பனை செய்ய சந்தை தேவை. உலக பொருளாதாரம் சரிந்தாலும், இந்திய பொருளாதாரம் சுமார் 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவை அடுத்து வேகமாக வளர்ந்து வருவது இந்தியா தான்.
உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதற்காக நம்மை பாதுகாப்பதற்கு நம்மைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொள்ளக்கூடாது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்தே இன்னும் முழுமையாக மீளவில்லை. பல வகைகளில் அந்த பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறது என்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக நிதி மற்றும் முதலீட்டு சந்தைகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தான் பிரச்சனை ஏற்படும்.
இன்னும் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளால் அந்த ஏழை மக்களின் வாழ்வு தான் மோசமடைந்துள்ளது.
கடந்த சில தலைமுறைகளாக கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம். எங்கள் மக்களுக்கு சிறப்பாக உணவளித்து, கல்வி கொடுத்து, அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். இருப்பினும் நாங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.
தீவிரவாத தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் பலியாகினர். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றினால் போதாது. பல வழிகளில் தான் போராட வேண்டியுள்ளது. அமைதியான சூழல் இருந்தால் தான் வளர்ந்து வரும் நாடுகளால் வளர்ச்சி அடைய முடியும்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் ரப்பானி கொல்லப்பட்டது தீவிரவாதிகள் பல வழிகளில் தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குழைக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய இந்தியா உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications