அதிகாலை 2 மணிக்கு கைதான திமுக பிரமுகர் மாலை வரை வேனில் அலைக்கழிப்பு!
திண்டுக்கல்: அதிகாலை 2 மணிக்குக் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரை வேனிலேயே வைத்து மாலை வரை போலீஸார் அலைக்கழித்ததாக புகார் கிளம்பியுள்ளது. போலீஸாரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஜோதீஸ்வரன். இவர் மீது போலீஸார் கொலை மிரட்டல் விடுத்தது, எம்.ஜி.ஆர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படங்களை உடைத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்து இன்று அதிகாலை 2 மணிக்குக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோதீஸ்வரன் பின்னர் காலை 9.30 மணிக்கு மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டார். அவரை திண்டுக்கல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜோதீஸ்வரனை வேனில் ஏற்றிய போலீஸார் திண்டுக்கல் சிறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பின்னர்அங்கு இடம் இல்லை என்று கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றனர். மதுரை மத்திய சிறைக்குச் சென்ற போலீஸார் அங்கும் இடமில்லை என்று கூறி மீண்டும் திண்டுக்கல் சிறைக்கே வந்து சேர்ந்தனர். காலையிலிருந்து மாலை வரை ஜோதீஸ்வரனை வேனிலேயே வைத்து அலைக்கழித்துள்ளனர் போலீஸார்.
இந்த செயலால் ஜோதீஸ்வரன் குடும்பத்தினர், அவர் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகினர். போலீஸார் வேண்டும் என்றே இப்படி அலைக்கழித்து ஜோதீஸ்வரனை பீதியூட்டியுள்ளனர் என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications