உட்கட்சிப் பூசலால் கடைசி நேரத்தில் வேட்பாளர் பெயரை அறிவித்த என்.ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர் பெயரை ஒரு வழியாக அறிவித்து விட்டார் முதல்வர் என்.ரங்கசாமி. அந்த வேட்பாளர் அவசரம் அவசரமாக வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளைப் பார்த்து நடுங்கும் ஆளுங்கட்சிகளை சரித்திரம் சந்தித்துள்ளது. ஆனால் தனது கட்சியினரையேப் பார்த்து பயந்து போகும் அளவுக்கு ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது நிச்சயம் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸாக மட்டுமே இருக்க முடியும். அந்தக் கட்சியின் தலைவராக இருப்பவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவு, கட்சி தொடங்கிய 3 மாதத்திலேயே ஆட்சியை, அதுவும் மிகப் பெரிய வெற்றியுடன் பிடித்தவர் ரங்கசாமி. ஆனால் ஆட்சியைப் பிடித்த அடுத்த விநாடி முதல் அவரது அரசியல் வாழ்க்கை மகா பதட்டமாகவே இருக்கிறது.
முதலில் அதிமுக அவரைக் கைவிட்டது. இதையடுத்து அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு ரங்கசாமியை மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் பல நாட்களுக்கு அமைச்சர்களைத் தேர்வு செய்ய முடியாமல் தவித்தார் ரங்கசாமி.
இந்த நிலையில் அவர் வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் ஒன்றான இந்திரா நகரில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதவு நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது.
ஆனால் இன்று காலை வரையும் ரங்கசாமி தனது கட்சி வேட்பாளர் யார் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து வந்தார். இதனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரே பயங்கர குழப்பமாக இருந்தனர். அனைவரையும் குழப்பியடித்த ரங்கசாமி ஒரு வழியாக இன்றுவேட்பாளர் என்பதை தெளிவுபடுத்தினார்.
அவரது கட்சி சார்பில் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரி மலர் கண்ணனை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ரங்கசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்திரா நகர் சீட்டைக் கேட்டு கட்சிக்குள் ஏகப்பட்ட பேர் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். பலர் சீட் கேட்டு ரங்கசாமியை நெருக்கியதால் அவர் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் அமைதி காத்து வந்தார். கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்து விட்டால் சிக்கலைத் தவிர்க்கலாம் என்பது அவரது திட்டமாகும்.அதன்படியே கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவித்தார் அவர்.












Click it and Unblock the Notifications