காவலர்கள் கூண்டோடு மாற்றம்: முதல்வர், டிஜிபியை சந்திக்கும் குடும்பத்தினர்
நெல்லை: நெல்லை மாநகரத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கூண்டோடு மாற்றப்பட்ட 20 காவலர்களின் குடும்பங்கள் தமிழக முதல்வர் மற்றும் டிஜிபியை சந்தித்து தங்களது இடமாற்ற உத்தரவை பரீசிலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கவிருக்கின்றனர்.
நெல்லை மாநகரத்திலிருந்து கடந்த மாதம் மாநகர ஆயுதப்படை காவலர் ராஜ்குமார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், மாநகர நுண்ணறிவு பிரிவு ஏட்டு குமரேசன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பாளை காவல் நிலையத்திலிருந்த பட்டன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், டவுன் காவல் நிலையத்திலிருநத ஏட்டு முத்தையா சிவகங்கை மாவட்டத்திற்கும், மாநகர குற்ற ஆவண காப்பக ஏட்டு சுப்பையா தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்பால் மதுரை சரகத்திறகும், நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மதுரை சரகத்திற்கும், பாளை குற்றப்பிரிவு எஸ்ஐ கலைசெல்வன் குமரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர்.
இதேபோல் பாளை பெருமாள்புரம் எஸ்ஐ ராஜாமணி நெல்லை மாவட்டத்திற்கும், மாநகர ஆயுதப்படை எஸ்ஐ நடராஜன், ஏட்டு வெங்கடாசலபதி, காவலர்கள் ஜெசின்குமார், சுரேஷ், ரமேஷ் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக்கும், மாநகர ஆயுதப்படை எஸ்ஐ சுந்தர்சிங் தேனி மாவட்ட ஆயுதப்படைக்கும், பேட்டை எஸ்ஐ ராஜன் நெல்லை சந்திப்பு குற்றபிரிவு ஏட்டு சண்முகம், நெல்லை சந்திப்பு காவல் நிலைய ஏட்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர். நெல்லை மாநகரத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள் சிலர் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டவர்கள் ஆவர். மற்றவர்கள் பணி புத்தகத்தில் எவ்வித குற்றசாட்டும் இல்லை. ஆனாலும் இவர்களும் திடீரென கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களின் குழந்தைகள் நெல்லையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வேறு மாவட்ட பள்ளிகளுக்கு உடனடியாக மாற்ற முடியவில்லை. மேலும் பலரின் வயதான பெற்றோரை பராமரிக்க முடியாமலும், குழந்தைகளின் படிப்பை கவனிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காவலர்கள் குடும்பத்தினர் முதல்வரையும், டிஜிபி ராமனுஜத்தையும் சந்தித்து தங்களது இடமாறுதல் உத்தரவை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications