Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களை கட்டியது குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா

Subscribe to Oneindia Tamil

குலசை எனப்படும் குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி காப்புக்கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்துக்களின் திருவிழாக்களில் ஒன்றான தசரா திருவிழாவை மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திருச்செந்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டிணம். இங்கு "அம்மையும் அப்பனுமாய்" ஒரே கல்லில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாளித்து வரும் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கொண்டாடப்படும் தசரா திருவிழா, மைசூரில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கு அடுத்தப்படியானது ஆகும்.

முத்தாரம்மன் பெயர்க்காரணம்

குலசை என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன் முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது. பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துகளே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது. முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து + ஆற்று + அம்மன் ஸ்ரீ முத்தா (ற்ற) ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று.

மேலும் நவமணிகளில், (முத்து, மரகதம், பச்சை, புஸ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம்) முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது. இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காப்பதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள். கற்பகத் தருவின் கீழ் இருப்பவர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்-இங்குக் கேட்டவரம் கொடுக்கும் கற்பகத் தருவாக-அம்பாள் எழுந்தருளியுள்ளாள்

வேடமிடும் பக்தர்கள்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது பல்வேறு ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நேர்ச்சை கடனாக விரதமிருந்து பல்வேறு வேடமிட்டு முத்தாரம்மனை வழிபடும் விதம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்.

மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது. இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேடமணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான்.

நவராத்திரி தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன், ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து, அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து நாட்களிலும், முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க"" எனும் குரல்களை தினம் பலமுறை கேட்கலாம். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவரும் மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது வியப்பானது.

நாட்டுப்புற பாடல் பாடி காணிக்கை

வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க வேஷம் கட்டும் அழக பாக்க ... என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம் அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை, வருடாவருடம் அதிகரித்து வருகிறது. இவர்கள் வசூலிக்கும் பணத்தை பத்தாம் நாள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பத்துநாளும் விதவிதமான

லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான் போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல் கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் கூடுவதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மகிஷாசூர சம்ஹாரம்

தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் முக்கிய அம்சமான மகிஷாசூர சம்காரம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்நது அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் மகிசாசுரமர்த்தினியாக மாறி மகிசாசூரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இதனையடுத்து அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். குலசேகரப்பட்டணத்தில் பத்துநாளும் நடைபெறும் நாட்டுப்புற திருவிழாவை ரசிக்க தயாராகின்றனர் பக்தர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+