வாக்காளர்களுக்கு மது விருந்து நடத்தினால் குண்டர் சட்டம்: மதுரை கலெக்டர் எச்சரிக்கை
மதுரை: வாக்காளர்களை கவரும் வகையில் மது உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சகாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் சட்டபூர்வமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஒரு சில இடங்களில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட கூட்டம் நடைபெற்றதாக தகவல் வருகிறது. பாரபட்சமற்ற வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளை பாதிக்க செய்யும் இது போன்ற ஏலத்தை நடத்துவதோ, இதில் பங்கு பெறுவதோ, தூண்டுவதோ சட்டப்படி குற்றமாகும்.
வாக்காளர்களை கவருவதற்காக பொது விருந்து, மது விருந்து ஆகியவை நடத்துவதும் குற்றமாகும். இந்த மாதிரியான நடவடிக்கைகள் தகவல்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications