நேபாள விமான விபத்தில் நேபாளத்தில் பலியான 8 பேரின் உடல்களுக்கு திருச்சியில் கண்ணீர் அஞ்சலி
திருச்சி : நேபாள விமான விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் திருச்சி கொண்டு வரப்பட்டன. தேசியப் பள்ளியில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அவை அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகே நடந்த விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உள்பட 19 பேர் பலியானார்கள். விமான விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்களையும் திருச்சி கொண்டு வர தமிழக அரசு விரைவான நடவடிக்கையை எடுத்தது. திருச்சி எம்.பி. ப. குமாரை நேபாளத்திற்கே அனுப்பி வைத்து உடல்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
அதேபோல திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதன் காரணமாக எட்டு பேரின் உடல்களும் விரைவாக திருச்சி கொண்டு வர நேரிட்டது. இன்று காலை 8 பேரின் உடல்களும் திருச்சி வந்து சேர்ந்தன.
விமான நிலையத்திலிருந்து உடல்களை தேசியப் பள்ளிக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள மைதானத்தில் எட்டு பேரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் என பல்வேறு தரப்பையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அஞ்சலிக்குப் பின்னர் 8 பேரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவர்களில் 7 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன. கனகசபேசன் என்பவரின் இறுதிச் சடங்கு மட்டும் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் திரும்பிய பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications