வரலாறு காணாத வகையில் 16 நாட்டு படைகளுடன் இந்திய ராணுவம் அடுத்தடுத்து கூட்டுப் பயிற்சி
டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு 16 நாட்டுப் படைகளுடன் கூட்டுப் பயிற்சியில் அடுத்தடுத்து இந்திய ராணுவம் ஈடுபடவுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருமளவில் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா அதிகம் ஈடுபட்டதில்லை. ஆண்டுக்கு இரண்டு பயிற்சிகள் வரைதான் அதிகபட்சம் நடக்கும். ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. 2011-12 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 16 நாட்டு ராணுவப் படைகளுடன் பிரமாண்டமான போர் ஒத்திகைப் பயிற்சியை இந்திய ராணுவம் மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, மங்கோலியா, கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாளம், மாலத்தீவு, செஷல்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த காலகட்டத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
நமது படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட பல்வேறு நாட்டுப் படைகளும் மிகவும் ஆர்வம் காட்டுவதாக ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு ராணுவ அதிகாரி கூறுகையில், 60 ஆண்டு கால போர் பயிற்சியும், வளமையான அனுபவமும் நிறைந்த ராணுவமாக இந்தியா திகழ்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாட்டுப் படைகளும் நம்முடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றன.
மேலும் தற்போது தீவிரவாதம் பெருமளவில் அதிகரித்து வருவதால், தீவிரவாத ஒழிப்பில் மிகப் பெரிய அனுபவம் கொண்ட இந்தியாவுடன் இணைந்து பயிற்சி பெறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.
வனப் பகுதிகளில் சிறந்த போர் அனுபவம் கொண்டதாக இந்திய ராணுவம் திகழ்கிறது. கொரில்லா போரில் ஈடுபடும் தீவிரவாதிகளை எதிர்த்து அதே கொரில்லா பாணியைக் கடைபிடித்து தாக்கும் பயிற்சியும் இந்திய ராணுவத்திற்குத் தரப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மிஸோரமில் உள்ள வைரங்க்டே என்ற இடத்தில் உள்ள வனப்பகுதி போர்ப் பயிற்சிப் பள்ளியில் இந்திய ராணுவத்தினருக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் ஜம்மு காஷ்மீரில், மலைப் பகுதி, பனிமலைகளில் போர் புரியும் முறைகள் குறித்த பயிற்சிப் பள்ளி உள்ளது. குளிர்காலத்தில் எப்படிப் போரிடுவது, பனி நிறைந்த பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உபாயங்கள் உள்ளிட்டவை குறித்து குல்மார்க் பகுதியில் உள்ள பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது.
சமீபத்தில் 200 இந்திய ராணுவத்தினர், இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து வார்மினிஸ்டரில் உள்ள நில போர் உபகரண மையத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல இன்னொரு குழு மங்கோலியாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் அந்த நாட்டு படையுடன் இணைந்துள்ளது.
அடுத்து ரானிகேட் அருகே உள்ள செளபாதியா என்ற இடத்தில் பிரெஞ்சு படையினருடன் இந்திய வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். சக்தி என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் இந்தியாவின் 99வது மெளன்டைன் பிரிகேட் படையினர் பங்கேற்கவுள்ளனர்.
இதேபோல கிர்கிஸ்தானில் விரைவில் கூட்டு ராணுவப் பயிற்சி ஒன்று நடைபெறவுள்ளது.
அதேபோல வருகிற மாதங்களில் நேபாளம், வங்கதேசம், மியான்மர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனும் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ராணுவம் மிகப் பெரிய அளவில் பல்வேறு நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதை சீனா, பாகிஸ்தான் ஆகிய 'எதிரி' நாடுகள் சற்று கவனத்துடன் கவனிக்க ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications