அணுசக்தி மின்சாரம் தேவை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது- பிரதமர் சூசகம்
டெல்லி: இந்தியாவுக்கு அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் தேவை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் கடந்த 11 -ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். முதலில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்னர் போராட்டம் தீவிரம் அடைவதை உணர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
முன்னதாக மத்திய அரசுடன் கூடங்குளம் விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டக்காரர்களை சந்தித்து பேச மத்திய அரசின் சார்பில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். அவர் வருகைக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐ. நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற பிரதமர் கடந்த செவ்வாய்கிழமை நாடு திரும்பினார். இதயைடுத்து நாராயணசாமி நேற்று பிரதமரை சந்தித்து கூடங்குளம் விவகாரம் குறித்து பேசினார். தான் இடிந்தகரை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியது பற்றியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பற்றியும் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் கூறிய விவரங்களை கேட்ட பிரதமர் கூறியதாக நாராயணசாமி தெரிவித்ததாவது,
கூடங்குளம் விவகாரம் குறித்து பிரதமரிடம் விளக்கினேன். நிலக்கரி, தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாது. எனவே, அணுசக்தி மின்சாரமும் நாட்டுக்கு தேவை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார் என்றார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்துப் பேச தமிழக நிதியமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி வரவிருப்பதையும் அவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications