உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 5.27 லட்சம் பேர் மனுத் தாக்கல்- இன்று மனுக்கள் பரிசீலனை
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும் மையங்களில் திருவிழாக் கூட்டமாக இருந்தது. கடைசி நேரத்தில் மனு செய்ய பெருமளவில் வேட்பாளர்கள் குவிந்து விட்டனர். மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்த போது கிட்டத்தட்ட 5.27 லட்சம் பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
1,32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மகா மந்தமாக இருந்த வேட்பு மனு தாக்கல் பின்னர் புயல் வேகம் பிடித்தது. கடைசி நேரத்தில் கிடுகிடுவென மனுக்கள் வந்து குவிந்தன. அதிலும் மஹாளய அமாவாசை தினத்தன்று கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர்.
இறுதி நாளான நேற்று தமிழகம் முழுவதும் திருவிழாக் கோலமாக மாறியது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்து விட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து மொத்தம் 5,27,014 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மேயர் பதவிக்கு 64 பேர் போட்டி
சென்னை மேயர் பதவியைப் பொறுத்தவரை மொத்தம் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 200 கவுன்சிலர்கள் பதவிக்கு 3445 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மனுக்கள் பரிசீலனை
தாக்கலான வேட்பு மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், அதை அக்டோபர் 3ம் தேதிக்குள் செய்யலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
முதல் கட்ட வாக்குப் பதிவு
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 17ம் தேதி நடைபெறும்.
அக்டோபர் 19ம் தேதி நடைபெறும் 2வது கட்ட தேர்தலின்போது, 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து தலைவர்களின் பிரசாரம் சூடு பிடிக்கும். வேட்பாளர்களும் இனி படு விறுவிறுப்பாக வீடு வீடாகவும், ரோடு ரோடாகவும், தெருத் தெருவாகவும் சுற்றியலைந்து வாக்குகளை சேகரிக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications