உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - ராமதாஸ் சந்தேகம்

இதுகுறித்து இன்று அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடக்கத்திலிருந்தே நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அமையவில்லை.
உள்ளாட்சித் தொகுதி இடஒதுக்கீடு தொடங்கி தேர்தல் அட்டவணை வெளியிட்டது வரை ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு ஆய்வின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒருசார்புத் தன்மை வெளிப்பட்டுள்ளது. பல இடங்களில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இல்லாத காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
அதேநேரத்தில் ஆளும் கட்சியினரின் வேட்புமனுக்களில் ஏராளமான குறைகள் இருப்பதை மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
ஆளும் கட்சி வேட்பாளர்களை எப்படியாவது வெற்றி பெறச்செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தேர்தல் அதிகாரிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் இதுவரை கூறிவந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை மெய்ப்பிப்பது போலவே இது அமைந்துள்ளது.
நடுநிலைமைக்கு உதாரணமாக செயல்பட வேண்டிய மாநிலத் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இல்லாத காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட பாமக வேட்பாளர்களின் மனுக்களை மறு ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேட்புமனுத் தாக்கலின்போதே ஆணையத்தின் செயல்பாடுகள் இவ்வாறு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையுடன் நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநிலங்களிலிருந்து 10 தேர்தல் ஆணையர்களை வரவழைக்க இருக்கும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெளிமாநிலப் பார்வையாளர் ஒருவரை அமர்த்த வேண்டும் எனறு வலியுறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications