இந்தியாவிலிருந்து வந்த பார்சலால் யு.எஸ். துணை அதிபரின் தம்பி வீட்டில் ஆந்த்ராக்ஸ் பீதி

ஜோ பிடனின் தம்பி பிரான்சிஸ் பிடன். 57 வயதான இவர் தெற்கு புளோரிடாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. அது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. அந்தப் பார்சலை பிரான்சிஸின் தோழி மின்டி பிரித்துப் பார்த்தார்.
அதில் வெள்ளை நிறப் பவுடர் இருந்தது. அப்போது அதை வாங்கிப் பார்த்த பிரான்சிஸ் மீது பவுடர் கொட்டி விட்டது. இதனால் பீதியடைந்தார் பிரான்சிஸ். அவரை ஆந்த்ராக்ஸ் பீதி தொற்றிக் கொண்டது. உடனடியாக சுகாதார, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து வந்தனர்.அக்கம் பக்கத்தில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தெருவையும் மூடி விட்டனர். பின்னர் பிரான்சிஸ் மற்றும் மிண்டி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் மிண்டி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் பிரான்சிஸ் மட்டும் பயம் காரணமாக வரவில்லை. அங்கேயே இரவு முழுவதும் தங்கிக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலைதான் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த பவுடர் குறித்து எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அது அபாயகரமற்றது என்று தெரிய வந்தது. அந்தப் பார்சலில் வேறுஎந்தப் பொருளும் இல்லை. இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2001ம் ஆண்டு அமெரிக்காவில் பார்சல்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் வைரஸ் பரப்பப்பட்டது. இதையடுத்து அமெரிக்க அரசின் வி்ஞ்ஞானி ப்ரூஸ் இவின்ஸ் கடும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் நினைவிருக்கலாம். பார்சல் மூலம் ஆந்த்ராக்ஸைப் பரப்பியதில் 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தது தெற்கு புளோரிடாவில் என்பதால் இப்போது பிரான்சிஸுக்கு வந்த வெள்ளை பவுடரால் அங்கு மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications