43 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுமார் 43 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஓட்டுப் பெட்டிகள் மூலமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியது.
இதற்காக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிடமும் பட்டியல் பெறப்பட்டு இதற்கான பணிகள் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 10 லட்சத்து 61 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் ஒரு வாக்காளருக்கு தலா 4 ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டும்.
இதை கணக்கிட்டால் சுமார் 42.44 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் தேவைப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் மாநகராட்சி பகுதிகளில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டு சீட்டுகள் பொருத்தப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் சுமார் 43 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் துவங்கியுள்ளது. கிராம பஞ்., தலைவர் மற்றும் கிராம பஞ்., வார்டு உறுப்பினர் தேர்தலுக்குரிய ஓட்டு சீட்டுகள் அச்சடிக்கும் பணி மதுரையில் துவங்கியது. இந்த ஓட்டுச் சீட்டுகளில் வேட்பாளர்கள் பெயர் ஏதும் இருக்காது. வரிசை எண் படி சின்னங்கள் மட்டுமே இருக்கும்
இப்பணிகள் முடிவடைந்ததும் ஊரக உள்ளாட்சிகளுக்கு உரிய ஓட்டுச் சீட்டுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொண்டு செல்லப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஓட்டு சீட்டுகள் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும்.












Click it and Unblock the Notifications