கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினைக்குத் தீர்வு காண குழு அமைப்பு- பிரதமர் ஒப்புதல்

மிழக அரசுக் குழு மற்றும் கூடங்குளம் போராட்டக் குழு ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர்.
கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவும் பிரதமரை சந்தித்தன.
தமிழக அரசின் குழுவில், அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை, வா.மைத்ரேயன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இரு குழுக்கள் மற்றும் பிரதமர் இடையே நடந்த இந்த சந்திப்பு 40 நிமிடங்களுக்கு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள், வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றை விளக்கி, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும், அணு உலையை மூடவேண்டும் என்று கூறி போராட்டக் குழு சார்பில் ஒரு மகஜர் அளிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பு முக்கியம், அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதை பிரதமர் நிதானமாக, பொறுமையாக கேட்டுக் கொண்டார்,. மேலும், நாங்களும், மக்களுடையே கவலைகளை போக்கும் வகையிலும் வாழ்வாதாரம் குறித்த விவகாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
அவற்றைக் கேட்டுக் கொண்ட பிரதமர், உங்களுடைய அனைத்து கவலைகளையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். மக்களுக்குப் புறம்பாக எதுவும் நடைபெறாது. இந்த விவகாரங்கள் குறித்து உயர் மட்டக் குழு அமைத்து பிரச்சினையை அணுக முடிவு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
பிரதமர் உறுதியளித்துள்ள உயர் மட்டக் குழுவானனது, சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று நேரடியாக மக்களை அணுகி, அவர்களது பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வுகளைப் போக்குவதர்கும், வாழ்வாதார பாதிப்பைத் தவிர்க்கும் வகையிலும் செய்யப்பட வேண்டியவை குறித்து ஆய்வு செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்தார் என்றார் ராஜா.
போராட்டக் குழு தரப்பில் இந்த சந்திப்பு குறித்துக் கூறுகையில், இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.எனவே பிரச்சினை தீரும் என்று நம்புகிறோம் என்றனர்.
கூடங்குளத்தில் இந்திய அணு மின் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு மின் நிலையங்கள் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல் யூனிட் டிசம்பர் மாதம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் கூடங்குளத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது.
இந்த அணு மின் நிலையம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் 100க்கும் மேற்பட்டோர் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதேபோல உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் அவர் போராட்டக் குழுவினரைக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமியை பிரதமர் இடிந்தகரைக்கு அனுப்பி வைத்தார். அவரும் வந்து பேசினார். பின்னர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்ட போராட்டக் குழுவினர் சென்னை சென்று முதல்வரை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து பிரதமரைச் சந்தித்து முறையிடுவது என போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். அதேபோல தமிழக அரசு சார்பிலும் ஒரு குழுவை அனுப்புவது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இரு குழுக்களும் இன்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்தன.
பிரதமரிடம் 3 மனுக்கள்
இன்றைய சந்திப்பின்போது கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மூன்று மனுக்கள் பிரதமரிடம் தரப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் ஒரு மனுவும், கூடங்குளம் போராட்டக் குழு சார்பில் ஒரு மனுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜா வழங்கிய தனி மனுவும் பிரதமரிடம் தரப்பட்டன.












Click it and Unblock the Notifications