அதிகாரிகள் இடையே ஈகோ: தொழிலாளர் நல அலுவலகத்துக்கு 2 பூட்டு
நாகர்கோவில்: நாகர்கோவில் தொழிலாளர் நல அலுவலகத்தில் புதிய அதிகாரியை பதவி ஏற்கவிடாமல் ஏற்கனவே இருந்த பெண் அதிகாரி தகராறு செய்ததாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் அலுவலகத்துக்கு 2 பூட்டு போடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிலாளர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) செயல்படுகிறது. தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நல அலுவலர் பொறுப்பில் தோட்ட நிறுவனங்களில் ஆய்வாளராக தமிழ்செல்வி என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் தொழிலாளர் துணை ஆய்வாளரான (தக்கலை) நெல்லையப்பன் என்பவரை தொழிலாளர் நல அலுவலர பொறுப்புக்கு நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 4-ம் தேதி நெல்லையப்பன் தொழிலாளர் நல அலுவலகத்துக்கு பொறுப்பேற்க சென்றார். அவரை பொறுப்பேற்கவிடாமல் தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லையப்பன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவுபடி தொழிலாளர் நல அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் நேசமணி நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரில் தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தன்னை பொறுப்பேற்க விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசி அரசு பணி செய்யவிடாமல் இடையூறாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி விசாரணை நடத்தி தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே இப்பிரச்சனை காரணமாக தொழிலாளர் நல அலுவலக வாயில் கேட்டுக்கு 2 பூட்டுகள் போடப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரச்சனை எழவில்லை.












Click it and Unblock the Notifications