காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளியான கர்ப்பிணி பெண்ணுக்கு அடி- உதை
தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்டகாட் காவல் நிலையத்தில் வாய்பேச முடியாத கர்ப்பிணி பெண்ணை போலீசார் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் புஷ்பா மற்றும் அவரது கணவர் தனசேகரன். இவர்கள் இருவரும் வாய் பேசமுடியாத, காதுகேளாத மாற்று திறனாளிகள்.
இவர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்த வீட்டிற்கு, அருகில் உள்ள வீட்டார் உடன் பிரச்சனை வந்துள்ளது. இதை காரணம் காட்டி, கடந்த செப்டம்பர் 30ம் தேதி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் புஷ்பாவை, தனசேகரையும் கட்டிவைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
பின்பு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, புஷ்பாவையும், தனசேகரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தனசேகரை வெளியில் நிற்க சொல்லிவிட்டு புஷ்பாவை காவல் நிலையத்தில் வைத்து ஆபாசமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர்.
இதனால், புஷ்பா உடல்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிப்காட் காவல் நிலைய அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என மிரட்டி உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பத்திற்கு காரணமான போலீசார் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தூத்துக்கடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications