ஆக்கபூர்வ பணிகளை செய்யாமல் அரசியல் எதிரிகளை ஜெ. பழி வாங்குகிறார்- திருமா

நெல்லை மாநகர மேயர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் அமுதா மதியழகனை ஆதரித்து வாக்கு சேகரிக்க அக்கட்சியின் பொது செயலாளர் திருமாவளவன் நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சி தேர்தலில் 13 இஸ்லாமிய இயக்கங்கள், 6 கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து போட்டியிடுகிறோம். தமிழகத்தில் 1,800 பேரும், நெல்லை மாவட்டத்தில் 53 பேரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். நெல்லை மாநகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். குடிநீர் வரியை ரத்து செய்வோம். மனித மலத்தை மனிதர் அள்ளும் நிலையை ஒழிப்போம். பாபநாசம்-நெல்லை நேரடி குடிநீர் திட்டம், குலவணிகர்புரம் ரயில்வே மேம்பால திட்டங்களை செயல்படுத்துவோம்.
துணை தலைவர் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு இல்லை. கூடங்குளம் அணு உலை திட்டத்தில் மக்கள் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும். பரமக்குடி சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சம்பத் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 4 மாதங்களாக அரசியல் எதரிகளை பழிவாங்கும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் முகம் சுளிக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications