தேர்தல் வெளிப்படையாக நடக்கும், அச்சமின்றி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையர் சோ. அய்யர்

கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய சோ. அய்யர், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுவரொட்டிகளை அறிமுகம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப் வழங்கப்படுகிறது. வீடு வீடாக அதிகாரிகளே இந்த பூத் சிலிப்புகளை வழங்குவார்கள். பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடைபெறும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சிறு தவறு செய்தால் கூட அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு 9 ஆயிரத்து 583 வார்டுகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இதிலிருந்து ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
சட்டம் ஒழுங்கு சீராக பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் பார்வையாளர்களை அழைத்துள்ளோம். பனிரெண்டு பேர் பார்வையிட வருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
தேர்தல் வெளிப்படையாக நடக்கிறது என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது முன்னுதாரணமான தேர்தலாக இருக்கும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications