மனைவி நளினிக்கு 'ஏ' வகுப்பு கேட்டு முருகன் உண்ணாவிரத எச்சரிக்கை: அதிகாரிகள் சமாதானம்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி்க்கு சகல வசதிகளுடன் கூடிய ஏ வகுப்பு அறை கொடுக்க வேண்டும் என்று அவரது கணவர் முருகன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்ததாகவும், அவரை சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் மனைவி நளினியும் அதே வேலூர் சிறையில் தான் உள்ளார்.
முதலில் வேலூர் சிறையில் இருந்த நளினியை பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை புழலுக்கு மாற்றினார்கள். பின்னர் கணவர் இருக்கும் சிறைக்கு தன்னை மாற்றுமாறு நளினி கோரிக்கை விடுத்ததின்பேரில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் வேலூர் சிறைக்குள் வந்தவுடன் நளினி கதறி அழுததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணவனும், மனைவியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு நளினியை சந்தித்த முருகன் 9 மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு 'ஏ' வகுப்பு கொடுக்கவில்லை என்றும், தான் இருக்கும் அறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் நளினி முருகனிடம் தெரிவித்துள்ளார். இதையடு்தது தனது மனைவி நளினிக்கு 'ஏ' வகுப்பு அறை கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் தெரிவித்தார் என்றும், உடனே அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினார்கள் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications