கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதில் ஆட்சேபமில்லை: சிபிஐ

மேலும், சினியுக் பில்ம்ஸ் நிறுவனர் கரிம் மொரானி மற்றும் ரிலையன்ஸ் அதிகாரி சுரேந்திர பிபாரா ஆகியோருக்கும் உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீன் வழங்கப்படவிருக்கிறது என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி (43) கடந்த மே மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இதே வழக்கில் சினியுக் பிலிம்ஸ் நிறுவனர் கரிம் மொரானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி பிபாரா ஆகியோர் கடந்த மே 30 மற்றும் ஏப்ரல் 21ல் இருந்து திஹார் சிறையில் உள்ளனர். இந்த இருவரும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களின் ஜாமீன் மனு வரும் 17-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ. பி. சைனி முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தான் கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.
கனிமொழியும், மொரானியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை சிறப்பு நீதிமன்றமும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்தன. தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பிபாரா தான் கைது செய்யப்பட்டவுடனேயே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கனிமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் பால்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பண பரிமாற்றம் நடந்ததற்கு மொரானி உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டிவியில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் வருகிற தீபாவளிக்கு தனது வீட்டில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications