வெடிமருந்துகள் நிரப்பிய கார் பறிமுதல்: டெல்லியைத் தகர்க்கும் சதி முறியடிப்பு!
அமாபாலா, ஹரியானா: கார் வெடிகுண்டு மூலம் டெல்லியை தகர்க்கும் சதியை போலீஸார் தக்க சமயத்தில் கண்டறிந்து முறியடித்துள்ளனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் 5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த காரை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்ததில் 15 பேர் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் டெல்லியைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலீசாரை உளவுத் துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்று இருப்பதாக டெல்லி குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் போலீசாருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அம்பாலா ரயில்வே நிலையம் விரைந்தனர். ரகசியத் தகவல் கொடுத்தவர் கார் மாடல் மற்றும் எண்ணைக் கூறியிருந்தார்.
அவர் தெரிவித்திருந்தது போன்று HR 03 0054 என்ற பதிவு எண் கொண்ட டாடா இன்டிகா கார் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த போலீசார் கார் உரிமையாளர் வரட்டும் என்று எதிர்பார்த்து அங்கு மறைந்திருந்தனர். ஆனால் நள்ளிரவாகியும் யாரும் காரை எடுக்க வராததால் போலீசார் காரைத் திறந்து பார்த்தனர். அப்போது காருக்குள் 5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, டெடனேட்டர்கள் மற்றும் டைமர் இருந்தது கண்டு திடுக்கிட்டனர்.
கார் பதிவு எண் போலி என்று கண்டுபிடித்தனர். அந்த எண் சண்டிகர் அருகில் உள்ள பன்ச்குலாவைச் சேர்ந்த வியாபாரி ராகுல் பெயரில் உள்ளது. கைபற்றப்பட்ட வெடிமருந்துகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
பண்டிகை நேரத்தில் டெல்லியைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தற்போது போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கார் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெடிகுண்டுகளுடன் அனுப்பப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றில் பெரும் நாச வேலைகளை ஏற்படுத்த 6 தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அனுப்பியிருப்பதாகவும் உளவுத் தகவல்கள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து டெல்லியில் மீண்டும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications