சென்னை வக்கீல் மகன் கொலை வழக்கை சிபிஐ கூடுதல் இயக்குநர் விசாரிக்க அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ் குமார் கொலை வழக்கை சிபிஐ கூடுதல் இயக்குநர் சலீம் அலி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார். இவரும் ஒரு வக்கீல். இவர் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். போலீஸாரின் தீவிர வேட்டையில் அவரது உடலை போரூர் ஏரியிலிருந்து மீட்டனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார்தான் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக சங்கரசுப்பு குற்றம் சாட்டினார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை. தான் குறிப்பிட்ட சில போலீஸாரிடம் சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை.வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று சங்கரசுப்பு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து சிபிஐ இயக்குநர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சதீஷ்குமார் வழக்கை திரிபுரா சிபிஐ கூடுதல் இயக்குநர் சலீம் அலி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications