வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைத் தாக்கிய இருவர் கைது
டெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷனைத் தாக்கிய இருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தாக்குதலுக்குப் பின்னர் தலைமறைவாக இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தேஜிந்தர் சிங் மற்றும் விஷ்ணு குப்தா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் இன்று காலை கைது செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இவர்கள் இருவரும் கோர்ட்டில் சரணடைய முயன்று வந்தனர். ஆனால் அதற்குள் இருவரையும் போலீஸார் பிடித்து விட்டனர். நேற்று டிவி ஒன்றுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த பூஷனை திடீரென உள்ளே புகுந்த 3 பேர் சரமாரியாக தாக்கினர். தாக்குதலை தடுக்க முயன்ற டிவி நிருபரையும் அவர்கள் தாக்கினர். தாக்குதலில் நிலை குலைந்தார் பூஷன். அவரது சட்டை கிழிந்து போய் விட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க நடந்த முயற்சியில் மேற்கண்ட இருவரும் தப்பி விட்டனர். இந்தர் வர்மா என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மூவரும் காஷ்மீர் குறித்த பூஷனின் கருத்து தொடர்பாக ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இவர்களிடமிருந்து ஸ்ரீராம் சேனா அமைப்பின் நோட்டீஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications