அணு மின் நிலைய ஊழியர்களை பணிக்குப் போக விடாமல் தடுத்து கூடங்குளத்தில் போராட்டம்
கூடங்குளம்: கூடங்குளம் போராட்டம் தற்போது வேறு பாதையில் திரும்பத் தொடங்கியுள்ளது. இதுவரை அமைதியான முறையில் உண்ணாவிரதம் மட்டுமே மேற்கொண்டு வந்தவர்கள் தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குப் பணிக்குச் செல்லும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்குச் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் கூடங்குளத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் சமீபத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைப் பார்த்தனர்.
பிரதமருடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் இடிந்தகரையில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. முதலில் இது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இது காலவரையற்ற போராட்டமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
தற்போது இடிந்தகரையில் 25 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கூடங்குளத்தில்சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் அணு மின் நிலையத்திற்கு வேலைக்குப் போகும் ஒப்பந்த ஊழியர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களது அடையாள அட்டைகளைப் பிடுங்கி வேலைக்குப் போக விடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
கூடங்குளத்தில் கன்னியாகுமரி-ராமேஸ்வரம் சாலையில் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் வேலைக்குப் போக முடியாமல் திரும்பிச் சென்றனர்.
அணு மின் நிலையித்தில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 1000க்கும் மேற்பட்டோர் கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். நேற்றும், இன்றும் மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடந்து வருவதால் இவர்களால் வேலைக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களை வழிமறித்து பணிக்குச் செல்ல விடாமல் தடுக்க ஆரம்பித்திருப்பதால் தற்போது கூடங்குளத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் கஞ்சித் தொட்டி
இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைப் படகு மீனவர்கள் கடலுக்குப் போய் பல காலமாகி விட்டது. இதனால் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குப் போகவில்லை. இதனால் மீனவர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. இதனால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கஞ்சித் தொட்டி திறப்பது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக் குழுவினர் யோசித்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications