ஜெயலலிதா யார் என்பது விஜயகாந்துக்கு இப்போது புரிந்திருக்கும்: திருமா

ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள், அனைத்து இஸ்லாமிய கிறிஸ்தவர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டில் இருந்து தலித் அமைப்புகளையும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து மாற்று அணி ஏற்படுத்த விரும்பினேன்.
2011 சட்டமன்றத் தேர்தல் வரை அது முடியாமல் போனது. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அந்த விருப்பம் நிறைவேறி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி என முதலிலேயே அறிவித்து விட்டார். ஆனால், அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உடன் வைத்துக் கொண்டே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வரிசையாக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால் வேறு வழியில்லாமல் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேற நேர்ந்தது. இப்போது ஜெயலலிதா யார் என்று விஜயகாந்திற்கு தெரிந்திருக்கும்.
திராவிட கட்சிகள் இதுவரை நமது ஓட்டு வங்கியை பயன்படுத்தி வெற்றிகளை பெற்றனர். நாம் வலிமையாக இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் தனித்து தேர்தலில் நிற்க முடியும்.
கொள்கை அளவில் சிறுபான்மையின மக்களும், தலித்களும் ஒன்றாய் சேர்ந்தால் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இங்கும் ஏற்படுத்த முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications