நீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்த கோவை டாஸ்மாக் மேலாளருக்கு அபராதம்
கோவை: பணியாளர் நீக்கம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த கோவை டாஸ்மாக் மேலாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.
கோவையை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தவர். இவர் மதுவில் கலப்படம் செய்ததாக குற்றம் சாட்டி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்க உத்தரவின்றி தன்னை பணி நீக்கம் செய்தது தவறு என்றும், மேலும் தன்னை பணியில் சேர்க்க உத்தரவிட கோரி, விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தனது உத்தரவில், மனுதாரருக்கு பணி நீக்க உத்தரவு வழங்காமல், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பணி நீக்க உத்தரவு வழங்கியதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அவர் மனுதாரரின் சட்ட செலவுக்கு வழங்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications