சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் திருப்புமுனை ஏற்படுத்துங்கள்- ஜெ
வேலூர்: கடந்த சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியதைப் போல உள்ளாட்சித் தேர்தலிலும் மீன்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வேலூரில் அவர் பிரச்சாரம் செய்தார். இதற்காக வழக்கம்போல் சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் வேலூர் வந்தார். வேலூர் சிறை அருகே அமைக்கப்பட்ட சிறப்பு ஹெலிபேடில் அவரது ஹெலிகாப்டர் இறங்கியது.
பின்னர் கோட்டை மைதானத்தில் அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், 5 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, உங்களை எல்லாம் சந்தித்து, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்தீர்கள்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர்ந்தது. இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஆட்சி மலர்ந்தது. உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில், உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்லானவற்றை நிறைவேற்றி இருக்கிறேன். சட்டம்- ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை, தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனது அரசு ஆட்சிக்கு வந்த பின் 625 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அபகரிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும், உரியவர்களிடம் சட்டப்படி ஒப்படைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில், மின்சார உற்பத்தியில் மின் குறை மாநிலமாக தமிழகம் விளங்கியது. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மின் உற்பத்தியைப் பெருக்கவும், மின்வெட்டைப் போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் தற்போது, மின் வெட்டு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டே இல்லாத மாநிலமாக நிச்சயம் ஆக்குவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று உறுதியை உங்களுக்கு நான் தருகிறேன். உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
இந்தப் பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு, நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையை ஏற்படுத்தினீர்கள். அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் மீன்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications