ஐயப்பன் விக்கிரத்தை தொட்ட வழக்கு: ஜெயமாலாவை விசாரிக்க தடை
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் விக்கிரத்தை தொட்டது தொடர்பாக நடிகை ஜெயமாலா உள்பட 3 பேருக்கு எதிராக நடக்கும் வழக்கை விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலையில் 2004ம் ஆண்டு பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரச்சனம் நடந்தது. அப்போது ஐயப்ப விக்கிரத்தை இளம்பெண் ஒருவர் தொட்டதால் புனிதம் கெட்டு விட்டதாக கூறினார். அதற்கு மறுநாளே புனித விக்கிரத்தை நான் தான் தொட்டேன் என கன்னட நடிகை ஜெயமாலா தெரிவித்தார்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உன்னிகிருஷ்ண பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து கடந்தாண்டு டிசம்பரில் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர் மற்றும் அவருடைய உதவியாளர் ரகுபதி ஆகியோர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு ரான்னி முன்சீப் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குக்கு தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஜெயமாலா மனு தாக்கல் செய்தார். அதில் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என 1991ல் தடை விதிக்கப்பட்டது.
நான் அதற்கு முன்பே சபரிமலை சென்றேன். எனவே என் மீது வழக்கு பதிய முடியாது. இது தொடர்பாக 2006ம் ஆண்டு சபரி்மலை கோயில் நிர்வாகிக்கு பேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்தேன். ஆனால் 2010ம் ஆண்டுதான் என் மீது வழக்கு பதியப்பட்டது.
எனவே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், ஜெயமாலா உள்பட 3 பேருக்கு எதிரான வழக்கை விசாரிக்க ரான்னி நீதிமன்றத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications