கூடங்குளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள் அதிகரிப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் இரண்டாவது கட்டமாக நடந்து வரும் உண்ணாவிரத போராட்டம் 6வது நாளாக நடந்தது. 12 தேதி காலையில் கூடங்குளம் மற்றும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்கள் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு சென்றனர்.
அப்போது போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் தினக்கூலி ஊழியர்களை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வழிமறித்து வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போராட்டக் குழுவினர் தினக்கூலி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி சர்வமத பிரார்த்தனை நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்து, விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தினர். விஜயாபதியில் உள்ள மசூதியில் இமாம் சாகுல்ஹமீது தலைமையில் போராட்டக் குழுவினருடன் முஸ்லீம்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இடிந்தகரை லூர்து அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிராத்தனை நடத்தினர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்களை அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கிராமம் கிராமமாக சென்று போராட்டக் குழுவினர் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
மேலும் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கூடங்குளம் பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் அணுநிலையத்திற்குள் பணியாளர்களை நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து கற்களை போட்டு மறியலில் ஈடுபடுவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
பொதுமக்களின் இந்த வேகமான போராட்டத்தினால் அணுமின் நிலையத்திற்கு செல்லும் தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 6,000 பேர் பணிபுரிந்து வந்ததில் தற்போது ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களே வேலைக்கு செல்வதால் அணுமின்நிலைய கட்டுபான பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அங்கு தங்கியிருந்த வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் உற்பத்தி என்ற இலக்கு பல மாதங்கள் காலதாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications