தமிழகத்தில் புரட்சி வெடிக்கும், கலகம் நடக்கும்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

விழுப்புரத்தில் பாமக சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் தனித்துப் போட்டியிடுகின்றோம். இதற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாம் தனித்துப் போட்டி என்று அறிவித்தாதல் மற்ற அரசியல் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊழல் நிறைந்த திராவிட கட்சிகளை, மக்கள் ஆதரவோடு அகற்றி, 2016ம் ஆண்டில், தமிழகத்தில் பாமக ஆட்சி அமையப் பாடுபட வேண்டும்.
திராவிட கட்சிகள் கொள்கை இல்லாத கட்சிகள். காங்கிரசோடு உறவு இல்லை என அறிவித்ததால், 1967ல் மக்கள் நம்பி ஓட்டளித்தனர். தமிழகத்தில் தரமான கல்வி, விவசாயத்தில் முன்னேற்றம் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஆனால், தனியார் நடத்திய டாஸ்மாக் கடைகளை, அரசே நடத்துகிறது. கல்வியை தனியாருக்கு கொடுத்து கொள்ளையடிக்க வழி செய்தனர். இலவசங்கள் மூலமாக வறுமையை ஒழித்து விட்டோம் என கூறுகின்றனர். சுடுகாட்டு ஊழலில் சிக்கியவருக்கு, ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், உச்சகட்ட கொள்ளையடித்துள்ளனர். தற்போதைய ஆட்சி எப்படி என இனிதான் தெரியும்.
பாமக வேட்பாளர்கள், தைரியமாக மக்களைச் சந்தித்து ஓட்டு கேளுங்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், 50, 100 ஓட்டு வித்தியாசம் இருக்கும் பகுதிகளில், அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்க அறிவுரை வழங்கியதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் அப்படி அறிவித்தால், அவர்கள் வெளியில் நடமாட முடியாது. அந்த அதிகாரிகள் வீட்டின் முன்பு என்ன நடக்கும் எனத் தெரியாது. வீட்டில் இருந்து ஒருவர் கூட வெளியில் வர முடியாது என எச்சரிக்கிறேன். தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். கலகம் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications