உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தேர்வு செய்ய நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

அனல் பறக்க நடந்த பிரசாரம் என்று கூற முடியாவிட்டாலும் கூட திருவிழாக் கோலம் பூண்டிருந்தது தமிழகம் கடந்த சில நாட்களாக. உள்ளாட்சித் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள், முக்கியப் புள்ளிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் என பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று மாலையுடன் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்தது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக 43,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சி தற்போது 200 வார்டுகளுடன் பிரமாண்டமானதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் புதிதாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதிகளில் புதிய பரவச நிலை காணப்படுகிறது.
சென்னையில் மட்டும் 4876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் வாக்குப் பதிவை வீடியோவில் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெளி மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழகத்தின் 2வது பெரிய நகரான மதுரை மாநகராட்சி மற்றும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவை மாநகராட்சி ஆகியவையும் தலா 10 வார்டுகளுடன் கூடியதாக விரிவுபடுத்தப்பட்டு தேர்தலை சந்திக்கவுள்ளன.
இந்த முறை மேயர், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டுத் தலைவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
நகர்ப்புறங்களில் 66,169 வேட்பாளர்களும், கிராமப்புறத்தில் 3,45,590 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவில் 1.33 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இன்று காலை முதல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளின் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வாக்குப் பெட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், அடையாள மை உள்ளிட்ட 84 வகையான பொருட்களைப் பெற ஆரம்பித்துள்ளனர். இன்று மாலைக்குள் இந்தப் பணி முடிந்து அவரவர் வாக்குச் சாவடிக்குச் சென்று அவற்றை தயார் நிலையில் வைக்கத் தொடங்குவர்.
இன்று இரவுக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து விடும். நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறும்.
இந்தத் தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளுமே தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகள் எப்படி சிதறப் போகின்றன, அது யாருக்கு சாதகமாக மாறப் போகிறது, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் ம்க்கள் ஆர்வத்தோடு காத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடியில் முதல் கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது
நெல்லை, தூத்துக்குடியில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் பகுதிகளை முற்றுகையிட்டு இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகரம், அம்பாசமுத்திரம், விகேபுரம் நகராட்சிகள், சேரன்மகாதேவி , ஏர்வாடி, கோபாலசமுத்திரம், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மேலச்சேவல், மூலக்கரைப்பட்டி, முக்கூடல், நாங்குநேரி, நாராணம்மாள்புரம், பணகுடி, பத்தமடை, சங்கர்நகர், திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர் ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பஞ் யூனியன்களுக்கும் முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 4 ஆயிரத்து 354 பதவிகளுக்கு 16 ஆயிரத்து 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில் நகராட்சிகள், 18 டவுன் பஞ்சாயத்துகள், 10 பஞ் யூனியன்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications