மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்- ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு மின் வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுகின்ற தொழிலாளர்களும், பணியாளர்களும் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிறப்பான வாழ்க்கைத் தரம் அமைத்துக் கொடுத்தால்தான், தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி அவர்கள் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்பட முடியும். லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது மின்சார வாரியத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து கடந்த 10-ந் தேதி அன்று தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மின் வாரியம் தனது உற்பத்தித் திறனையும், செயல் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், அதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மனநிறைவான போனஸ் வழங்குவது என எனது அரசு தற்போது முடிவெடுத்து உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன்படி, மின் வாரியத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒரு கணிசமான தொகையை பெறும் வகையில் போனஸ் மற்றும் கருணைத் தொகையை இந்த ஆண்டு வழங்கிட நான் முடிவு செய்துள்ளேன்.
அந்த அடிப்படையில், 2010-2011-ம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த 71,012 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை, ஆக மொத்தம் 20 சதவீதமும், மேலும் 12,064 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் கருணைத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.61 கோடியே 46 லட்சம் செலவு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications