பெண் வேட்பாளர்களின் கையோங்கி நிற்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
நெல்லை : நெல்லை, தூத்துக்குடியில் 9 நகராட்சிகளில் 7 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு பெண்கள் போட்டியிடுகின்றனர். 2 நகராட்சிகளில் மட்டுமே ஆண் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சிகள் உள்ளன. இந்த 2 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின், நகராட்சிகளிலும் பெண்கள் கையே ஓங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், விக்கிரமாசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 6 நகராட்சி தலைவர் பதவிகள் பொதுப் பிரிவில் பெண்களுக்கும், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவி தனி பிரிவில் பெண்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புளியங்குடி, செங்கோட்டை நகராட்சியில் மட்டுமே ஆண் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மாநகராட்சி, நகராட்சிகளில் பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால் எங்கும் பெண்கள் மயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications