நெல்லை, விருதுநகர்- 6 மணியிலிருந்தே வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்
நெல்லை: தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதையடுத்து காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட படப்பகுறிச்சி, திருவெண்ணநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்னனு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 3,4-வது வார்டுக்கு உட்பட் 75-வது வாக்குச்சாவடியில் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுகள் வராததால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நெல்லையில் 400 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்றும், நாளை மறுநாளும் இருகட்டமாக நடக்கிறது. இதனால் தேர்தல் சமயத்தில் பிரச்சனைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் இருக்கும் குற்றப் பின்னணி உடையவர்கள், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு அவ்வப்போது சிறைக்கு சென்று வருபவர்கள், சிறையில் இருந்து வெளியில் வந்தவர்கள், பட்டியலிலுள்ள ரவடிகள் உள்ளிட்டவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை 350 பேரும், நெல்லை மாநகரத்தில் 50 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆர்.டி.ஓ.க்கள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடம் நன்னடத்தை குறித்த உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வாங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications