சென்னையில் குண்டர்கள் உதவியோடு கள்ள ஓட்டுப் போடுகிறார்கள்- ராமதாஸ்
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் குண்டர்களின் உதவியோடு அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டு வருகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச்சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் கள்ள வாக்கு போட்டு வருகின்றனர்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர் சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்று ஐயத்தில் தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.
சென்னையின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம் பிடிக்கப்படவில்லை. மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகர காவல் துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications