வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது

முதல் கட்ட வாக்குப் பதிவின்போது சராசரியாக 65 முதல் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் பல்வேறு குளறுபடிகள் காரணமாக வாக்குப் பதிவில் தேக்க நிலை ஏற்பட்டது. பிற்பகலுக்கு மேல் தற்போது வாக்குப் பதிவு சற்று வேகம் பிடித்து, 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.
வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டதால் சென்னை மாநகராட்சியில் பெரும் திரளான வாக்காளர்களுக்கு ஓட்டுப் போடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதே நிலை பல பகுதிகளிலும் காணப்பட்டது.
வாக்குப் பதிவு ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. பிற்பகலுக்கு மேல்தான் சற்று வேகம் பிடித்தது. இதன் காரணமாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் வரை பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த 2006ல் நடந்ததைப் போல பெருமளவிலான வன்முறைச் சம்பவங்கள் இந்தத் தேர்தலில் நடைபெறவில்லை என்றாலும் கூட சத்தம் போடாமல் அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஓட்டுப் போட்டனர்
முதல்வர் ஜெயலலிதா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை ஓட்டுப் போட்டார். ஓட்டளித்த பின்னர் அவர் அதிமுக 40வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல் நிலைப் பள்ளியில் தனது மனைவி தயாளு அம்மாளுடன் சென்று வாக்களித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வந்து ஓட்டுப் போட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சாலிகிராமம் காவேரி ரங்கன் பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.
வராத ஏஜென்டுகள்-லேட்டான வாக்குப் பதிவு
சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களிலும், தமிழகத்தின் சில இடங்களிலும் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
காலை 8 மணிக்குத்தான் வாக்குப் பதிவு தொடங்கும் என சில ஏஜென்டுகள் தவறாக நினைத்து விட்டதால் அவர்கள் வரவில்லை. எனவே அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.
இதேபோல சென்னை வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தொடங்குவது தாமதமானது.
சில இடங்களில் மின்தடை குறுக்கிட்டதால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. இப்படி பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது. மற்றபடி வேறு பிரச்சினை எதுவும் இதுவரை எழவில்லை.
எங்கெங்கு தேர்தல்?
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியப் பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
10 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு 209 பேரும், 820 மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கு 7,729 பேரும் களத்தில் நிற்கின்றனர்.
மாநகராட்சிகளில் எத்தனை வார்டுகள்?
தமிழகத்தில் பல மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும், மதுரை, கோவையில் தலா 100 வார்டுகளும் உள்ளன.
திருச்சியில் 65, வேலூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருப்பூரில் தலா 60 வார்டுகளும், நெல்லையில் 55 வார்டுகளும் உள்ளன.
மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று நேரடி தேர்தல் நடைபெற்றது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்களிப்புக்குப் பயன்படுத்தப்பட்டன.
19ம் தேதி 2வது கட்ட தேர்தல்
அடுத்து 2ம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர்19ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications