வாக்குச் சாவடியில் தங்காமல் வேட்பாளர் சுப்புலட்சுமி வீட்டில் தங்கிய தேர்தல் அலுவலர்கள் சஸ்பெண்ட்
தேனி: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்குப் போகாமல், அங்கு வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுக்களையும் மட்டும் வைத்து விட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுப்புலட்சுமி என்ற வேட்பாளரின் வீட்டில் போய்த் தங்கிய இரு தேர்தல் அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம ஆண்டிப்பட்டி தாலுகா அனுப்பம்பட்டி கிராமத்தி்ல் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னதாக, தலைமை தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட உத்தமபாளையம் தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணன் , தேர்தல் அதிகாரியான ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சவேரியார் ஆகியோர் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களை பெற்றுக் கொண்டு அதை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் வாக்குச் சாவடியில் அவற்றை வைத்த அவர்கள், நேராக சுப்புலட்சுமி என்பவர் வீட்டுக்குப் போய் விட்டனர். இந்த சுப்புலட்சுமி, ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். வாக்குச் சீட்டுக்களையும், வாக்குப் பெட்டிகளையும் பொறுப்பே இல்லாமல் வைத்து விட்டு வேட்பாளர் வீட்டில் தங்குவதா என்று கூறி தேர்தல் அதிகாரிகளுடன் அவர்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீங்கள் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறி அவர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமிக்குத் தகவல் போனது. இதையடுத்து இரு தேர்தல் அதிகாரிகளையும் அவர் சஸ்பெண்ட் செய்ய கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications