2 வேட்பாளர்கள் போட்டியிட்ட இடத்தில் 5 பேரின் பெயர்கள் -ராதாபுரம் அருகே தேர்தல் ரத்து
நெல்லை: ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் வாக்குச் சீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட பரமேஸ்வரபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 250 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஒரு பூத்தில் வழங்கப்பட்ட ஓட்டுச்சீட்டில் 2 வேட்பாளர்கள் பெயர்களுக்கு பதிலாக 5 பேரின் பெயர்கள் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தன. இதனால் குளறுபடி ஏற்பட்டது.
இதனையடுத்து இங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் பீவி என்பவர் மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு பரிசீலனையில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை எனக் கூறி மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து காதர் பீவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அதிகாரி இது குறித்து தீர விசாரித்து பட்டியலில் பெயர் இருக்கும்பட்சத்தில் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டது. எனினும் பெயர் இல்லாத காரணத்தை காட்டி காதர் பீவி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 44வது வார்டில் காதர்பீவி பெயர் இடம்பெற்றிருந்ததையடுத்து அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், அரசியல் சூழ்ச்சி காரணமாக தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும், நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சாலை மறியல்
தூத்துக்குடி மாநகராட்சி 57வது வார்டில் அதிமுக வேட்பாளர் சேகர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறி மற்ற கட்சி வேட்பாளர்கள் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications