என்ன தப்பு நடந்துச்சு?- சென்னையின் 4877 பூத் ஆவணங்களை ஆராய்ந்த தேர்தல் அதிகாரிகள்
சென்னை: முறைகேடுகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து சென்னை நகரில் அமைக்கப்பட்ட 4877 வாக்குச் சாவடி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகள் கூடி ஆய்வு செய்தனர்.
தமிழகத்திலேயே மோசமான வாக்குப் பதிவு சென்னை மாநகராட்சியில்தான் நடந்தது. மிகக் குறைந்த அளவில், அதாவது 48 சதவீத அளவுக்குத்தான் இங்கு வாக்குப் பதிவு நடந்தது. பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டுப் போடவில்லை. இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 70 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்த நிலையில் தற்போதைய மாநகராட்சித் தேர்தலில் 22 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு அடியோடு குறைநத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. வாக்காளர்கள் வன்முறை பயத்தில் வரவில்லை. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன என்பவை அவற்றில் சில.
இந்த நிலையில் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இதுதொடர்பாக திமுக, பாமக ஆகியவை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகளையும் தொடர்ந்துள்ளன. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மாநகர தேர்தல் ஆணையரான கார்த்திகேயன், தேர்தல் ஆணையம் ஆகியோர் அமல்படுத்தவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதனால் உயர்நீதிமன்றம் கேட்கப் போகும் சரமாரியான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 4,877 வாக்குச்சாவடி ஆவணங்களையும் பரிசீலிக்கும் பணி ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. தேர்தல் பார்வையாளர்கள் வெங்கடேசன், ரமேஷ்சந்த் மீனா, சந்திரமோகன், சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடந்தது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறிப்பில் இடம் பெறும். ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வாக்குகளை பதிவு செய்ய முடியும். ஓட்டுப்போட வருபவர் வாக்குப்பதிவுக்கான சீட்டை வாங்கி, அடையாள மை வைத்த பிறகே அடுத்த ஓட்டு போட முடியும். ஆனால் தவறான முறையில் ஓட்டுப்பதிவு செய்யப்பட்டிருந்தால் இந்த நேர இடைவெளி இருக்காது.
இதை வைத்து முறைகேடான ஓட்டுக்கள் போடப்பட்டனவா என்பதை கண்டுபிடித்து விடலாம். இது தவிர வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் கொடுக்கப்படும் சீட்டுக்கள் வரிசைப்படி இருக்கிறதா என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. ஓட்டுப்போட்டவர்கள் பெயருக்கு நேர் குறியிடப்பட்டு உள்ளதா என்பதும் சரிபார்க்கப்பட்டது. இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறுகிறது.
உயர்நீதிமன்றத்தில் வலுவான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த திடீர் நடவடிக்கையில் மாநகராட்சி தேர்தல் ஆணையர் கார்த்திகேயன் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, நாளை 7 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆய்வுக்குப் பின்னர் தேவைப்பட்டால் இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications