'அத்வானி ஆதரிக்கலையே'...கோபத்தில் மீண்டும் சிறைக்கு போன எதியூரப்பா!

சனிக்கிழமை இவரை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன் மருத்துவப் பரிசோதனைகள் நடந்தன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் சிறைச்சாலையின் மருத்துவமனையிலேயே டைம் பாஸ் செய்த அவர், சிறை செல்லுக்குள்ளேயே போகவில்லை.
இந் நிலையில் நள்ளிரவு 1.15 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் அங்கிருந்து ஜெயநகர் ஜெயதேவா அரசு இதயவியல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் அங்கிருந்தபோதே ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு நாளைக்கு (20ம் தேதிக்கு) ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனைகளில் அவருக்கு இதயக் கோளாறு ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதே நேரத்தில் அவருக்கு நீண்ட காலமாகவே நீரிழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் உள்ளதை உறுதி செய்த மருத்துவமனை, அவருக்கு மனச் சோர்வும், நரம்பியல் பிரச்சனையான பார்க்கின்சன்ஸ் நோயின் ஆரம்பகட்ட அறிகுறியும், முதுகு வலியும், தைராய்ட் பிரச்சனையும் இருப்பதாகவும் கூறிவிட்டு நேற்று டிஸ்சார்ச் செய்துவிட்டது.
இதையடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய அவர், நிருபர்களின் கண்ணில் படாமல் தப்பி இன்னொரு அரசு மருத்துவமனையான விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்றார். இதற்காக இரு ஆம்புலன்ஸ்களை மருத்துவமனையின் முன், பின் புற வாசல்களில் நிறுத்திவிட்டு, இரு கர்நாடக அமைச்சர்களையும் அங்கு நிறுத்தினர். இதனால், இதில் ஒரு ஆம்புலன்சில் தான் எதியூரப்பா ஏற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவரை பிண அறை வழியாகக் கொண்டு சென்று இன்னொரு ஆம்புலன்சில் ஏற்றி விக்டோரியாவுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இதையறிந்து நிருபர்கள் அங்கு விரைய, எதியூரப்பாவின் முகமே வெளியில் தெரியாத படி ஒரு பச்சை நிற மருத்துவமனை போர்வையை போலீசார் சுற்றிப் பிடித்துக் கொள்ள, அதில் மறைந்தபடியே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று மாலை இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எதியூரப்பாவின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லி வரும் பாஜகவின் மூத்த தலைவரே இவ்வாறு நீதியையும் சட்டத்தையும் அவமதிப்பதாகவும், நீதிமன்ற அனுமதியே இல்லாமல் மருத்துவமனை விட்டு மருத்துவமனை தாவி வருவதாகவும் கண்டனம் எழுந்தது.
இந் நிலையில் ஊழல் விவகாரத்தில் யாரையும் நாங்கள் காப்பாற்ற மாட்டோம், ஊழல் பிரச்சனை தொடர்பாக எதியூரப்பாவுக்கு முன்பே நாங்கள் அறிவுரை சொன்னோம் என்று ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்துத் தெரிவித்தார்.
அத்வானியின் இந்தக் கருத்து தனக்கு மிகுந்த மன வருத்தம் தருவதாக எதியூரப்பா கூறியுள்ளார். எதியூரப்பாவுக்கு மிக நெருக்கமான அமைச்சரான சோமன்னா நிருபர்களிடம் கூறுகையில், அத்வானியின் கருத்தால் எதியூரப்பா மிகவும் வருத்தம் அடைத்துள்ளார். இதனால் விரைவிலேயே மீண்டும் சிறைக்குத் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார் என்றார்.
இந் நிலையில் இன்று காலை திடீரென எதியூரப்பா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மீண்டும் சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து எதியூரப்பாவுக்கு மிக நெருக்குமான இன்னொரு அமைச்சர் ரேணுகாச்சாரியா கூறுகையில், சிறையை தவிர்ப்பதாக வரும் செய்திகளால் மிகவும் வருத்தம் அடைத்துள்ளார் எதியூரப்பா. இதனால் அவர் தான் தன்னை உடனே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லுமாறு கூறிவிட்டார். தனக்கு மருத்துவமனையில் சிகிச்சை வேண்டாம் என்றும் கூறிவிட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications