பூத் அலுவலர்களின் தபால் ஓட்டுக்களை திருடிய திட்டக்குடி போஸ்ட் மாஸ்டர் கைது
திட்டக்குடி: வாக்குச் சாவடி அலுவலர்கள் போட வேண்டிய தபால் ஓட்டுக்களை திருடி விட்டதாக திட்டக்குடியில் போஸ்ட் மாஸ்டர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இவர் தொழுதூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடந்த 17-ந் தேதி வாக்குச்சாவடி அலுவலர்கள் போட வேண்டிய ஓட்டுகளை தபால் மூலம் அனுப்பி இருந்தனர்.
நேற்று வரை இந்த தபால் ஓட்டுகள் சென்று சேரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த ராணி, சத்திய ராஜேஷ்வரன், பூங்கோதை ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்ச்செல்வன் தபாலில் வந்த ஓட்டுகளை தானே திருடி அந்த ஊரில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவரது நண்பர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
தமிழ்ச்செல்வனுக்கு உடந்தையாக இருந்த செல்வராஜ், கேபிள் ஆபரேட்டர் சேகர் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications