ஊழல் வழக்குகளால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிட்டது: அத்வானி வருத்தம்
இடாநகர்: ஊழல் வழக்குகளால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 11ம் தேதி பீகார் மாநிலத்தில் துவங்கிய ரத யாத்திரை நேற்று அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அத்வானி பேசியதாவது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி, ஆத்ர்ஸ், காமன்வெல்த் என்று பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது.
ஊழல் வழக்குகள், விலைவாசி உயர்வு உள்ளி்ட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகளில் முடிவு எடுக்கத் தெரியாமல் ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் நாட்டையே தவறான பாதையில் வழி நடத்துகின்றனர்.
இந்தியாவில் ஊழல்கள் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டவர் மத்தியில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிட்டது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுமார் ரூ.25 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெரும் தொகையை வைத்து 6,000 இந்திய கிராமங்களில் குடிநீர், மின்சாரம், சாலை அமைப்பு, சுகாதார வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். வரும் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.
அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி தான். அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் வெளிநாட்டவர்கள் அத்துமீற அனுமதிக்கமாட்டோம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை பண்பை கொண்டது என்பதில் சந்தேகமே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications