உள்ளாட்சித் தேர்தல்-10 மாநகராட்சியையும் இழந்து 2வது இடத்தைப் பிடித்து திமுக படு தோல்வி!

கடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றதிமுகவால் இந்த முறை ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. மேலும் கடந்த முறை மிக படோடபமாக வெற்றி பெற்ற சென்னையை இந்த முறை மிகப் பரிதாபமாக அது இழந்துள்ளது. ஆரம்பத்தில் வேலூரில் மட்டும் முன்னணியில் இருந்தது. ஆனால் அதுவும் பின்னர் கை நழுவிப் போனது. அனைத்து இடங்களிலும் அக்கட்சி 2வது இடமே கிடைத்தது.
மதிமுகவிடம் படு தோல்வி
இதை விட கேவலமாக குளித்தலை நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுகவிடம் தோல்வியைத் தழுவியது திமுக.
சில இடங்களில் சுயேச்சைகள் திமுகவை விட முன்னணியில் இருந்தனர். கூட்டணியை இழந்ததால் ஓரளவு பாதிப்பை சந்தித்துள்ளது திமுக என்பது இந்தத் தேர்தலி்ல கண்கூடாகத் தெரிந்து விட்டது. அதேசமயம், கூட்டணியைப் பிரிந்ததால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை, மாறாக மிகப் பெரிய வெற்றியை அது பெற்றுள்ளது.
பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தால் திமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், பாமகவும், காங்கிரஸும் இந்தத்தேர்தலில் மகா மோசமான தோல்வியைத் தழுவி அவர்களின் வாக்கு வங்கி ஒரு மாயை என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஒருகாலிப் பெருங்காய டப்பா என்பதை காட்டி விட்டது.
வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது திமுக. அதிமுகவுக்கு இணையாக வார்டு உறுப்பினர் பதவியை போட்டி போட்டு திமுக வாங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆதரவு திமுகவுக்கே
திமுகவைப் பொறுத்தவரை அது முன்னணியில் இருந்த ஒரே 'ஏரியா' தபால் வாக்குகள் மட்டும்தான். தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுக்கள் பெரும்பாலானவை திமுகவுக்கே கிடைத்துள்ளது. இது பெரும் வியப்பைத் தருகிறது. ஆட்சி மாறியும் கூட அரசு ஊழியர்கள் தொடர்ந்து திமுகவுக்கே ஆதரவாக இருந்து வருவது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications