புரட்சிப் படையிடம் தப்ப சாக்கடைக் குழியில் பதுங்கிய கடாபி-சுடாதீங்க என்று கெஞ்சியும் கொல்லப்பட்டார்!

தனது உடலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிப்பட்ட கடாபி, சுடாதீங்க, சுடாதீங்க என்று கெஞ்சியுள்ளார். ஆனால் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்று விட்டனர்.
உலக அளவில் முக்கியமான சர்வாதிகாரிகளில் கடாபிக்கும் இடமுண்டு. லிபியாவை தனது சர்வாதிகாரப் பிடியில் வைத்திருந்த கடாபி, சர்வாதிகாரம், எதேச்சதிகாரம் ஆகியவற்றை மட்டுமே நம்பினார். மக்களின் நம்பிக்கை, அன்பைப் பெற அவர் தவறி விட்டார். இதனால்தான் தனது சொந்த மக்களாலேயே ஓடஓட விரட்டப்பட்டு கடைசியில் சாக்கடைக் குழியில் பதுங்க வேண்டிய நிலைக்கு அவர் போய் விட்டார்.
கடாபி ஆட்சி போய் புரட்சிப் படையினர் வசம் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் வந்த நிலையில் அவரது சொந்த ஊரான ஷிர்தே நகர் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அதையும் சமீபத்தில் பிடித்தனர் புரட்சிப் படையினர். இதையடுத்து அங்கு நேட்டோ படையினர் உதவியுடன் புரட்சிப் படையினர் ஷிர்தேவை சல்லடை போட்டுத் தேடினர்.
அப்போது புரட்சிப் படையினருடன் அரசுப் படையினர் ஒரு இடத்தில் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடாபி பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் 5 கார்களில் கடாபியும் அவரது ஆதரவுப் படைகளும் தப்பியோடினர். இது குறித்து அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினருக்கு புரட்சிப் படையினர் தகவல் தரவே, அமெரிக்க போர் விமானங்கள் விரைந்து வந்த அந்த கார்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
இதில் கடாபியின் ஆதரவுப் படையினர், உளவுப் பிரிவுத் தலைவர், மகன் ஆகியோர் பலியாகிவிட, கடாபி படுகாயத்துடன் தப்பி அருகே இருந்த பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கினார்.
இதையடுத்து புரட்சிப் படையினர் கடாபியை வெளியே இழுத்துப் போட்டனர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கால்களில் சுட்டனர். பின்னர் வயிற்றிலும் சுட்டுவிட்டு கடுமையாக மிதித்தனர்.
அப்போது தன்னை விட்டுவிடுமாறு கடாபி கெஞ்சியுள்ளார் கடாபி. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை தலையில் சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
1969ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் லிபியாவைப் பிடித்தார் கடாபி. அன்று முதல் லிபியாவை அவர் ஆட்டிப் படைத்து வந்தார். தனக்கு எந்த ரூபத்திலும் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டார். சர்வாதிகாரமாக நடந்த இவர் நாட்டு மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறத் தவறினார். தனது சொந்த மக்களையே அவர் துன்புறுத்த ஆரம்பித்தார். அதுவே அவருக்கு எதிராக இப்போது விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக அமைந்து விட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து உதவியுடன் அரபு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியும், வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புரட்சிகளும் லிபியாவுக்கும் பரவி இப்போது கடாபியின் மரணத்துடன் வந்து முடிந்துள்ளன. கடாபி வசம் கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியாவை மீட்டுள்ள புரட்சிப் படையினர் அதை எப்படி சீரமைக்கப் போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள். ஒருவர் 1970ம் ஆண்டிலேயே இறந்து விட்டார். இரு மனைவியர் மூலம் அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் இரண்டு மகன்கள் இறந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications