வட மாவட்டங்களிலேயே பாமகவுக்கு மாபெரும் தோல்வி!

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி விட்டு கூட்டணி தாவி வந்த இந்தக் கட்சியை இந்த முறை திமுகவும் அதிமுகவும் கழற்றிவிட்டு தனியே நிற்க வைத்தன. இதையடுத்து இரு திராவிடக் கட்சிகளையும் ஒழிப்பேன் என்று புதிய கொள்கையை முன் நிறுத்தி பிரச்சாரத்தில் இறங்கினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ஆனால், மாநகராட்சிகளில் சொல்லிக் கொள்ளும்படி கவுன்சிலர் பதவிகளை இந்தக் கட்சியால் பிடிக்க முடியவில்லை. 124 நகராட்சிகளில் 1 இடத்தில் கூட பாமக வெல்லவில்லை.
529 பேரூராட்சிகளில் காரிமங்கலம், தெடாவூர், ஆகிய 2 பேரூராட்சிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றுள்ளது.
வட மாவட்டங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தன்னை முன் நிறுத்தி வந்த பாமகவுக்கு அந்த மண்டலத்திலேயே பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் என வன்னிய சமூக மக்கள் அதிகம் வசிக்கும் எந்தப் பகுதியிலும் பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் பாமக கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற ராமதாசின் பேச்சு காற்றோடு கரைந்துவிட்டது.
முக்கிய கட்சிகளை மிரட்டி சீட் வாங்கி இதுவரை காலம் தள்ளி வந்த பாமகவின் உண்மையான பலம் தனித்து நின்றதால் வெளியில் தெரிந்துவிட்டது.
இதன்மூலம் இனி முன்பு மாதிரி பாமகவால் திமுக, அதிமுகவிடம் பேரம் பேச முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
மதுரையில் பாமக ஆச்சரிய வெற்றி:
இந் நிலையில் பாமகவுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு ஓட்டு கூட வாங்கத பாமக வேட்பாளர்:
ஆனால், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
6-வது வார்டில் பா.ம.க. வேட்பாளராக எஸ்.கேசவன் போட்டியிட்டார். இந்த வார்டில் 111 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராமன் 13 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் செல்வகுமார் 8 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சுந்தரேசன் 101 வாக்குகளும் பெற்றனர்.
ஆனால் பா.ம.க. வேட்பாளர் கேசவன் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரே அவருக்கு ஓட்டு போடவில்லை போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications