உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வென்றது புதுமை அல்ல: கருணாநிதி

டெல்லி கிளம்பும் முன் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆளுங்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், கடந்த காலத்தில் தி.மு.கவும். ஆளும் பொறுப்பை ஏற்றபோது உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, அதில் பெருவாரியான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
அதனால், இது ஒன்றும் புதுமை அல்ல.
உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர்கள், உறுப்பினர்கள், தலைவர்கள் எல்லாம் கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை, அடிப்படை வசதிகளை செய்து ஆவன செய்யவேண்டும் என்ற வேண்டுகோளோடு அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார். டெல்லி செல்லும் நீங்கள் அவரை சந்திப்பீர்களா?
பதில்: கட்டாயம் சந்திப்பேன்.
கேள்வி:- தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று எல்லாக் கட்சிகளும் புகார்கள் செய்திருக்கிறார்களே. தி.மு.க. என்ன கருதுகிறது?
பதில்: அவர்கள் சொன்னதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. எல்லாக் கட்சிகளும் சொன்ன கருத்தைத்தான் நானும் சொல்கிறேன். பலமுறை குறைபாடுகளை எடுத்துச் சொல்லியும் கூட தேர்தல் ஆணையம் எங்கள் குரலை காதில் போட்டுக் கொள்ளவில்லை. நீதிமன்றம் அச்சுறுத்தியும் கூட தேர்தல் ஆணையம் அதற்குக் கட்டுப்பட்டு நடந்ததாகத் தெரியவில்லை.
கேள்வி:- கூடங்குளம் பிரச்சனை சம்பந்தமாக பிரதமரிடம் பேசுவீர்களா?
பதில்: மத்திய அரசு பெரிய குழு ஒன்றினை அமைத்திருக்கிறார்கள். எனவே கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடந்தால் எங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications